திருவாரூர், நவ.14: திருவாரூர் கலெக்டர் அலுவலகம் பின்புறத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இதில் தினந்தோறும் வெளி நோயாளிகளாக சுமார் ஆயித்து500 பேர்கள் வரையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுமட்டுமன்றி உள்நோயாளிகளாக திருவாரூர் மற்றும் நாகை மாவட்டம் என 2 மாவட்டங்களையும் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் அவர்களது உறவினர்கள் நண்பர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் என நாள் ஒன்றுக்கு சுமார் 10 ஆயிரம் பேர் வரை இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்து செல்லும் நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த மருத்துவ கல்லூரிக்கு செல்வதற்கு கலெக்டர் அலுவலகத்தின் வலது புறத்திலிருந்து ஒரு சாலையும், இடது புறத்தில் இருந்து ஒரு சாலையும் இருந்து வந்தநிலையில், ஏதோ காரணம் காட்டி அதில் இடது புற சாலையானது கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் அப்போது மருத்துவமனை டீனாக இருந்த மீனாட்சிசுந்தரம் என்பவர் மூலம் இரவோடு இரவாக திடீரென மதில் சுவர் வைத்து அடைக்கப்பட்டது. இதன் காரணமாக கொரடாச்சேரி, அம்மையப்பன் உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து இந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் வாகனங்களும் வலது புறத்தில் இருந்துவரும் சாலையை பயன்படுத்த வேண்டிய நிலை இருந்து வருகிறது.