திருவாரூர், நவ.14: திருவாரூர் மாவட்டத்தில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்ற 5 தனியார் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குனர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி பணிகள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் இந்த பயிர்களுக்கு தேவையான யூரியா, பொட்டாஷ் மற்றும் டிஏபி உள்ளிட்ட உரங்கள் தட்டுப்பாடு காரணமாக தனியார் உரக்கடைகளில் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் மற்றும் வேளாண் இணை இயக்குனருக்கு வரப்பெற்ற புகாரின் பேரில் மாவட்டம் முழுவதும் வேளாண் துறை அலுவலர்கள் தனியார் கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி, முத்துப்பேட்டை மற்றும் குடவாசல் ஆகிய ஊர்களில் இது போன்று அதிக விலைக்கு விற்கப்பட்டது தெரிய வந்ததன் பேரில் இந்த 5 கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குனர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.