திருச்சி, நவ.14: திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரியில் அக்டோபர் 2ம் தேதி சுவரை துளையிட்டு ₹13 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.தனிப்படையினர் நடத்திய விசாரணையில் திருவாரூர் சீராத்தோப்பை சேர்ந்த முருகன் தலைமையிலான கும்பல் இக்கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக திருவாரூர் மடப்புரம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த மணிகண்டன், முருகனின் சகோதரி கனகவல்லி ஆகியோரை போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர். முக்கிய குற்றவாளிகளான கும்பல் தலைவன் முருகன், கனகவல்லியின் மகன் சுரேஷ் ஆகியோரை தீவிரமாக தேடி வந்த நிலையில் அக்டோபர் 9ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் சுரேஷ் சரணடைந்தார். முருகன் அக்டோபர் 11ம் தேதி பெங்களூரு 11வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி நாகம்மா முன்னிலையில் சரணடைந்தார். பெங்களூருவில் நடந்த ஒரு கொள்ளை வழக்கு தொடர்பாக 2014 அக்டோபர் 21ம் தேதி பானஸ்வாடி போலீசார் முருகனை கைது செய்தனர். அந்த வழக்கில் ஜாமீனில் வந்த முருகன் தலைமறைவானதால், அவரை பிடிக்க பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கில் தான் முருகன் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 14 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.