சிதம்பரம், நவ. 14: உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான சிதம்பரத்தில் நடராஜர் கோயிலும், பழமை வாய்ந்த அண்ணாமலை பல்கலைக்கழகமும் உள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும், பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவ, மாணவிகளும் வந்து செல்கின்றனர். வடமாநிலத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஏராளமானோர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தங்கி படித்து வருகின்றனர். வாரம் ஒரு முறை ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து (வண்டி எண்-16793) பைசாபாத் நோக்கி விரைவு ரயில் செல்கிறது. இந்த ரயில் சிதம்பரத்திற்கு திங்கட்கிழமை காலை 8 மணிக்கும், சென்னைக்கு மதியம் 12.40 மணிக்கும் சென்றடைகிறது. மறுமார்க்த்தில் இந்த வண்டி(16794) பைசாபாத்தில் புதன்கிழமை புறப்பட்டு சென்னைக்கு வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கும், சிதம்பரத்தை இரவு 9,30 மணியளவில் கடந்து ராமமேஸ்வரத்திற்கு சனிக்கிழமை காலை 7.10 மணியளவில் சென்றடைகிறது.