சின்னசேலம், நவ. 14: விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிந்துள்ளது. அதற்கான இடம் ஆய்வுப்பணி, எல்லை வரையறை பணிகளை கவனிக்க தனி அலுவலர் நியமிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது. சின்னசேலம் தாலுகாவை பொறுத்தவரை சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்தின் ஒரு பகுதி மற்றும் கல்வராயன்மலைப்பகுதியை உள்ளடக்கி உள்ளது. கல்வராயன்மலையில் மக்கள் தொகை குறைவாக இருந்தபோதிலும் நிலபரப்பளவில் மிகப்பெரியது ஆகும். கல்வராயன்மலையில் கரியாலூர், வெள்ளிமலை, மணியார்பாளையம், சோரப்பட்டு உள்ளிட்ட 172 சிறிய, பெரிய கிராமங்கள் உள்ளன. வெள்ளிமலை, இந்நாடு, பொட்டியம் உள்ளிட்ட 15 ஊராட்சிகள் உள்ளது. கல்வராயன்மலையில் உள்ள மக்கள் சாதி சான்று, ஆதார் திருத்தம், இதர சான்றுகள் உள்ளிட்ட எந்த வேலையாக இருந்தாலும் மலையில் இருந்து 60கிலோமீட்டர் பயணம் செய்து கச்சிராயபாளையம் வந்து பின் அங்கிருந்து சின்னசேலம் தாலுகா அலுவலகம் வரவேண்டும். இதனால் மலைவாழ் மக்களின் காலநேரம் விரயமாவதுடன், பொருளாதார அளவில் இழப்பும் ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதைப்போல வீடு மற்றும் விவசாய நிலங்களுக்கு பட்டா, நில அளவை போன்ற பணிகளுக்கும் சின்னசேலம் வரவேண்டிய நிலை இருந்து வந்தது.