கள்ளக்குறிச்சி, நவ. 14: கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என கடந்த ஜனவரி மாதம் 8 ம்தேதி தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து மாவட்ட தனி அலுவலராக கிராண்குராலா நியமிக்கப்பட்டார். தற்காலிக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்படுவதற்காக கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தை தேர்வு செய்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யும் பணியிலும் மாவட்ட தனி அலுவலர் கிராண்குராலா தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்குவதற்கான அரசாணை நேற்று வெளியானது.அதில், கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்திற்கு உட்பட்ட 2 வருவாய் கோட்டங்கள் அதாவது கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் ஆகியவை உள்ளடங்கியது.