புதுச்சேரி, நவ. 14: அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து தட்டுப்பாடு உள்ளதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் துறை இயக்குனரிடம் முறையிட நேற்று சட்டசபை அருகிலுள்ள மாநில சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் சென்றனர். அங்கு அதிகாரி இல்லாததால் முற்றுகையில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு பிரதேச செயலாளர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். நகர செயலாளர் மதிவாணன், மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மருந்து தட்டுப்பாடு கண்டித்து கோரிக்கை ஏந்திய பதாகைகளுடன் கோஷமிட்டனர். தகவலின்பேரில் பெரியகடை எஸ்ஐ முருகன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து சமாதானம் செய்தனர். இயக்குனர் காரைக்காலில் இருப்பதாக தகவல் தெரிவித்ததால் அங்கிருந்து பேரணியாக அரசு பொது மருத்துவமனைக்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மருத்துவமனை கண்காணிப்பாளரை சந்திக்க முயன்றனர். அதற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் அங்கு மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடவே சலசலப்பு ஏற்பட்டது.