நடப்பு கார்த்தி பட்டத்தில் பயிர் செய்ய 5 டன் விதை நெல் இருப்பு வைப்பு: வேளாண் அதிகாரிகள் தகவல்

அணைக்கட்டு, நவ.14: நடப்பு கார்த்தி பட்டத்தில் பயிர் செய்ய 5 டன் விதை நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அணைக்கட்டு வேளாண்மை அலுவலகத்தில் நடப்பு கார்த்தி பட்டத்தில் பயிர் செய்ய போதுமான விதை நெல் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்பட்டு வந்தனர்.இதுகுறித்து, கடந்த 8ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மாவட்டத்தில் இருந்து 3 டன் விதை நெல் அணைக்கட்டு வேளாண்மை அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு நேற்று முன்தினம் முதல் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: அணைக்கட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட விவசாயிகள் போதுமான அளவிற்கு நெல் பயிர் செய்து பயன்படும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் விதை நெல் இருப்பு வைக்கப்பட்டு அதனை விவசாயிகள் வாங்கி சென்று பயிர் செய்து பயனடைந்து வருகின்றனர்.

அதேபோல் இந்த ஆண்டு நடப்பு கார்த்தி பட்டத்தில் விவசாயிகள் நெல் பயிர் செய்யும் விதமாக 3 டன் விதை நெல் கூடுதலாக வரவழைக்கப்பட்டு மொத்தமாக அணைக்கட்டு வேளாண்மை அலுவலகத்தில் கோ 51 ரகம் விதை நெல் 5 அரை டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.  இது மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பயிர் செய்யும் விவசாயிகள் சிட்டா நகல், ஆதார் அட்டை நகல் எடுத்து வந்து அணைக்கட்டு வேளாண்மை அலுவலகத்தில் பதிவு செய்து மானிய விலையில் விதை நெல்லை வாங்கி சென்று பயிர் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: