தமிழகம், கேரளாவில் விளைச்சல் சரிவு தேங்காய் விலை உயர்வு

சேலம், நவ.14: தமிழகம் மற்றும் கேரளாவில் காய்ப்பு குறைந்ததால், தேங்காய் விலை உயர்ந்து வருகிறது. இந்தியாவில் தமிழகம் மற்றும் கேரளாவில்தான் அதிகளவில் தென்னை மரங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் பறிக்கப்படும் தேங்காய் இந்தியா முழுவதும் பல மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இதைத்தவிர வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழகம் மற்றும் கேரளாவில் கடந்த 2017ம் ஆண்டு பெய்த மழையால் கடந்தாண்டு ெதன்னைமரங்களில் நல்லமுறையில் காய்ப்பு தந்தது. இந்நிலையில் கடந்த இரு மாதமாக ெதன்னையில் காய்ப்பு குறைந்துள்ளது. இதன் காரணமாக மார்க்கெட்டுக்கு தேங்காய் வரத்து சரிந்துள்ளது. இதனால் தேங்காய் விலை உயர்ந்து வருகிறது.  இது குறித்து சேலம் தேங்காய் மொத்த வியாபாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் காங்கேயம், தாராபுரம், திருப்பூர், பல்லடம், ஈரோடு, பெருந்துறை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் தென்னை மரங்கள் அதிகளவில் உள்ளன. இந்த பகுதிகளில் பறிக்கப்படும் தேங்காய் 60 சதவீதம் சமையல் உபயோகத்திற்கும், மீதி 40 சதவீதம் எண்ணெய் அரவை ஆலைகளுக்கும் செல்கிறது.

கடந்த சில நாட்களாக தென்னைமரங்களில் காய்ப்பு குறைந்துள்ளது. இதன் காரணமாக மார்க்கெட்டுக்கு வழக்கமாக வரத்தில் இருந்து தேங்காய் வரத்து 30 சதவீதம் சரிந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக தேங்காய் விலை உயர்ந்துள்ளது. ஒரு டன் ₹20 ஆயிரம் முதல் ₹22 ஆயிரத்திற்கு விற்ற நிலையில், தற்போது ₹24 ஆயிரம் முதல் ₹26 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு ₹20க்கு பெரிய தேங்காய், ₹25 எனவும், ₹15க்கு விற்ற தேங்காய் ₹18 எனவும், ₹12க்கு தேங்காய் ₹15 எனவும், சிறிய தேங்காய் ₹10 என விற்பனை செய்யப்படுகிறது.கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பருவமழை ஓரளவுக்கு கை கொடுத்துள்ளது. இதன் பலன் வரும் ஜனவரி மாதம் கிடைக்கும். தை மாதத்தில் தேங்காய் வரத்து அதிகரிக்கும். அப்போது விலை குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

Related Stories: