காடையாம்பட்டி, நவ.14: காடையாம்பட்டி அருகே விதி மீறி செயல்படும் சாயப்பட்டறைகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், போலீஸ் ஸ்டேஷனுக்கு திரண்டு வந்து புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காடையாம்பட்டி அருகே கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி மோட்டூர் பகுதியில், சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால், நிலத்தடி நீர்மட்டம் மாசடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த மோகனவேல் மற்றும் அவரது மனைவி தனலட்சுமி(41) ஆகியோர், தங்கள் குடும்பத்தினருடன் நேற்று தீவட்டிப்பட்டி காவல்நிலையத்திற்கு வந்தனர். குடிநீரில் சாயக்கழிவு கலந்து வருவதாக கூறி பாட்டிலில் பிடித்து கொண்டு வந்த தண்ணீரை காண்பித்து புகார் தெரிவித்தனர்.