மாவட்ட காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள மெட்டல் டிடெக்டர்கள் பழுது

விருதுநகர், நவ. 14: விருதுநகர் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள 11 மெட்டல் டிடக்டர்களில் 4 டிடெக்டர்களை தவிர மற்றவை பழுதா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் மெட்டல் டிடெக்டர்களை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் 20 லட்சம் பொதுமக்கள் உள்ளனர். இவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க 2,542 போலீசார் பணியில் உள்ளனர். அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் ரயில்நிலையங்கள், கோவில்கள், நீதிமன்றங்களில் மெட்டல் டிடெக்டர்களை வைத்து, அதன்வழியாக உள்ளே மக்களை அனுப்பி சோதனை செய்கின்றனர். மேலும், மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஹேண்ட் மெட்டல் டிடெக்டர் கருவிகள் இருக்கின்றன. வெடிபொருள்களை கண்டறியும் டிடெக்டர்கள் சென்னை, மதுரை உள்ளிட்ட பெருநகர போலீசார் வசம் உள்ளன.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் நீதிமன்றங்களில் திருவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நிரந்தரமான மெட்டல் டிடெக்டர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அயோத்தி தீர்ப்பை முன்னிட்டு விருதுநகர், ராஜபாளையம் ரயில்நிலையங்கள், விருதுநகர் ஒருங்கிணைந்த நீதிமன்றம், இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் மாவட்ட போலீஸ் சார்பில் மெட்டல் டிடெக்டர் வைக்கப்பட்டுள்ளன. இந்த மெட்டல் டிடெக்டர்களும் உள்ளே யார் சென்றாலும் சத்தமிடுகின்றன. யாரும் செல்லாத போதும் சத்தத்தை எழுப்புகின்றன.

இது குறித்து போலீஸ் உயரதிகாரிகள் கூறுகையில், ‘மாவட்டத்தில் 11 டோர் டிடெக்டர்கள் இருந்தாலும், பைப் வகையிலான மெட்டல் டிடெக்டர்கள் மட்டும் ஒரளவு செயல்பாட்டில் உள்ளன. டோர் மெட்டல் டிடெக்டர்கள் அனைத்தும் முழுமையான செயல்பாட்டில் இல்லை’ என்றனர். பாதுகாப்பை உறுதி செய்தவதற்கான மெட்டல் டிடெக்டர்களை முறையாக சீரமைத்து பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: