பழநி கோயிலில் இரண்டாவது ரோப்கார் திட்டம் விறுவிறு

பழநி, நவ.14: பழநி கோயிலில் 2வது ரோப்கார் திட்டத்திற்கான கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் போன்ற திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்வதற்கு வசதியாக மேற்கு கிரிவீதியில் இருந்து வின்ச்சும், தெற்கு கிரிவீதியில் இருந்து ரோப்காரும் இயக்கப்படுகிறது. தமிழகத்தில் முதன்முதலில் பழநி கோயிலில்தான் ரோப்கார் அமைக்கப்பட்டது. ரூ.4.5 கோடி மதிப்பீட்டில் 2004ல் துவங்கப்பட்ட தற்போதைய ரோப்காரின் பயண நேரம் 3 நிமிடம் ஆகும். ஜிக்-பேக் முறையில் மேலே செல்லும் போது 15 பேரும், கீழே இறங்கும்போது 13 பேரும் மட்டுமே பயணிக்க முடியும். 1 மணி நேரத்தில் சுமார் 400 பேர் மட்டுமே தற்போதைய ரோப்காரில் பயணிக்க முடியும். இதனால் வார விடுமுறை தினம், கார்த்திகை, சஷ்டி மற்றும் விழா காலங்களில் ரோப்காரில் பயணிக்க பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க  வேண்டி இருந்தது. மழை மற்றும் காற்று காலங்களில் தற்போதைய ரோப்காரை இயக்க முடியாது. எனவே பழநி கோயிலுக்கு கூடுதலாக 2வது ரோப்கார் அமைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

நீண்டகால போராட்டத்திற்கு பின் சுமார் ரூ.72 கோடி மதிப்பீட்டில் 2வது ரோப்கார் அமைக்க அரசு ஒப்புதல் அளித்தது. சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் பிரான்ஸ் நாட்டின் நிறுவனத்துடன் இணைந்து ரோப்கார் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட உள்ள ரோப்கார் நவீன வசதிகளுடன் 1 மணி நேரத்தில் சுமார் 1200 பேர் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளது. மழை மற்றும் காற்று காலங்களிலும் தடையின்றி இயக்க முடியும். பூமிபூஜை முடிவுற்ற நிலையில் தற்போதைய ரோப்காரின் கிழக்கு பகுதியில் 2வது ரோப்கார் நிலையத்திற்கான கட்டுமான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. கட்டுமான பணிகள் நிறைவடைந்தவுடன் பிரான்ஸ் நாட்டில் இருந்து கப்பல் மூலம் 2வது ரோப்காருக்கான இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, பின் டிரைலர் லாரிகள் மூலம் எடுத்து வந்து பொருத்தப்பட உள்ளது. 18 மாத காலத்திற்குள் பணிகளை முடித்துக் கொடுக்க வேண்டுமென ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள நிலையில், தற்போது பழநி கோயிலுக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள இளம் ஐஏஎஸ் அதிகாரியான ஜெயசந்திரபானுரெட்டி பணிகளை தரமான முறையில் விரைந்து முடித்துக் கொடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.

Related Stories: