திண்டுக்கல், நவ.14: திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலெட்சுமி வெளியிட்ட அறிவிப்பு வருமாறு: திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணிவரை வழங்கப்பட்டு வருகிறது. தொலை தூரங்களில் இருந்து வந்து அடையாள அட்டை பெறாதவர்களுக்காக ஒன்றிய வாரியாக சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. தொப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் வரும் 15ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் எலும்பு முறிவு மருத்துவர், காது மூக்கு தொண்டை பிரிவு மருத்துவர், மன நல மருத்துவர் மற்றும் கண் மருத்துவர் ஆகிய அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச்சான்று வழங்க உள்ளனர். மேற்படி மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.