திருவண்ணாமலை, நவ.14: திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் மேற்கொண்டனர்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை 56ஐ ரத்து செய்ய வேண்டும். அரசு துறையில் அவுட்சோர்சிங் முறை மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிடவேண்டும். தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள நாலரை லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 18ம் தேதி கோட்டை நோக்கி பேரணி செல்ல இருக்கின்றனர். இதையொட்டி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் வேன் மூலம் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடத்தி வருகின்றனர். அதன்படி, இந்த வேன் பிரசாரம் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்றது. ஆரணியில் நேற்று காலை தொடங்கிய இந்த பிரசார இயக்கம் சேத்துப்பட்டு, போளூர், கலசபாக்கம் வழியாக திருவண்ணாமலை வந்தனர். அங்கு கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், காந்தி சிலை ஆகிய இடங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரம் மேற்கொண்டனர்.