தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை

நாமக்கல், நவ.14: தொழிலாளர் நலநிதி செலுத்தும் உறுப்பினர்கள், தங்கள் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் பாலதண்டாயுதம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும், தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியத்துக்கு நலநிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, கல்வி உதவி, கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாடநூல் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து ₹25 ஆயிரம் ஊதியமாக பெறும் தொழிலாளர்கள், இத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கல்வி உதவித்தொகை, ஒவ்வொரு கல்வி ஆண்டுக்கும் பொறியியல், மருத்துவம், சட்டம், ஆசிரியர் பயிற்சி, விவசாயம், உடற்பயிற்சி ஆகியவற்றுக்கு, பட்டயப்படிப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை  ₹5ஆயிரம் முதல் ₹12 ஆயிரம்  வரை வழங்கப்படும். மேல்நிலை மற்றும் தொழில்பயிற்சி கல்விக்கு, ₹4ஆயிரம்  வழங்கப்படுகிறது.

இதுதவிர, ஒவ்வொரு கல்வி மாவட்டங்களிலும், அரசு பொதுத்தேர்வில் முதல் 10 இடங்களை பெறும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, 10ம் வகுப்புக்கு ₹2 ஆயிரம், பிளஸ் 2வுக்கு ₹3 ஆயிரம் கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. புத்தகம் வாங்க உதவித்தொகையாக, மேல்நிலை கல்வி முதல் பட்ட மேற்படிப்பு வரை ₹1,000 முதல் ₹3 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பத்தை,  பணியாற்றும் நிறுவனம் மூலம் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள், செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம், அஞ்சல் பெட்டி எண்.718, தேனாம்பேட்டை, சென்னை-6 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு பாலதண்டாயுதம் தெரிவித்துள்ளார்.

Related Stories: