ராயக்கோட்டையில் தூய்மை பணிகள்

கிருஷ்ணகிரி, நவ.14: ராயக்கோட்டை பகுதியில் நடந்து வரும் தூய்மை பணிகளை கலெக்டர் பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். ராயக்கோட்டை பஸ் ஸ்டாண்டை, கிருஷ்ணகிரி கலெக்டர் பிரபாகர் பார்வையிட்டார். அப்போது, உடனடியாக பஸ் ஸ்டாண்டை தூய்மைப்படுத்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர், அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தை பார்வையிட்டு, சத்துணவு கூடம், அரசு மாணவர் விடுதி ஆகியவற்றை தூய்மையாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தினார். மேலும், குடிநீர் வசதி மற்றும் கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்கப்படுவது குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். அப்போது, பொதுப்பணித்துறை மூலம் பள்ளியிலுள்ள 2 கட்டிடங்களை சீரமைக்கவும், பள்ளியின் அருகில் வேகத்தடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

அதை தொடர்ந்து, ராயக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு, இளம்தாய்மார்களிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை வழங்கி, சுகாதாரம் மற்றும் தூய்மை குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டார். பின்னர், கெலமங்கலம் ஒன்றியம் ஏரிசின்னகவுண்டன்அள்ளி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியை ஆய்வு செய்த கலெக்டர், அதே ஊரில் உள்ள பாழடைந்த கிணற்றை சுற்றி மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அமைக்கும்படி வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து வீடு, வீடாக சென்று தூய்மை மற்றும் சுகாதார பணிகளை பார்வையிட்டு, குடிநீர் தொட்டிகளை சுத்தமாக வைத்துக்கொள்ள பொதுமக்களை அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: