திருப்பூர், நவ 14: வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைக்க விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோருக்கு 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இது குறித்து திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘‘வேளாண் பணியாளர்கள் பற்றாக்குறையினை கருத்தில் கொண்டு மாநில அரசு வேளாண் இயந்திர மயமாக்குதல் திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதற்காக வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் திருப்பூர் மாவட்டத்தில் பொது பிரிவிற்கு 6 வாடகை மையங்கள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு வாடகை மையம் அமைத்திட ரூ.25 லட்சம் என்ற மதிப்பீட்டில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்பட உள்ளது. வட்டார அளவில் அமைக்கப்படுவதால் விவசாய பணிகளுக்கு தேவைப்படும் பல்வேறு வகையான வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மற்றும் சிறு வேளாண் உபகரணங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் குறைந்த வாடகையில் கிடைக்கும். இவ்வாறான மையங்களை அமைத்திட முன்னோடி விவசாயிகள், விவசாய சுய உதவி குழுக்கள் மற்றும் தொழில் முனைவோர் போன்றோர் முன் வரலாம். இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் வேளாண்மை பொறியியல் துறையால் அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களின் இயந்திரங்களில் இருந்து தங்களின் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்யலாம். தேர்வு செய்யப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கான மொத்த தொகையை வரைவோலையாக(டி.டி) நிறுவனங்களின் பெயரில் செலுத்திட வேண்டும்.