விவசாய நிலம் ஆக்கிரமிப்பு தனியார் வெடிமருந்து தொழிற்சாலை மீது புகார்

காங்கயம், நவ.14: காங்கயம் அருகே விவசாய நிலத்தை தனியார் வெடி மருந்து தொழிற்சாலை நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

 காங்கயம் தாலுகா, ஊதியூர் கிராமம், அருந்ததியர் குடியிருப்பு பகுதியைச்  சேர்ந்தவர் ஆறுமுகம்(58), விவசாயி. இவர் காங்கயம் வட்டாட்சியரிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது: ‘‘30 வருடங்களுக்கு முன்பு அரசு சார்பில் எனக்கு இரண்டரை ஏக்கர் நிலம் வழங்ககப்பட்டது. அதில் தற்போது நான் விவசாயம் செய்து வருகிறேன். இந்நிலையில், எனது நிலத்துக்கு அருகே செயல்பட்டு வரும் தனியார் வெடிமருந்து தொழிற்சாலை நிறுவனத்தினர் எனது நிலத்தில் 25 சென்ட் பகுதியை ஆக்கிரமித்துள்ளனர்.

மேலும் எனது நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தோடு, அத்துமீறி எனது நிலத்தில் 20 எண்ணிக்கையில் அளவுக் கற்களையும் நட்டு வைத்துள்ளனர். இது குறித்து வெடிமருந்து தொழிற்சாலை நிறுவனத்திடம் கேட்டால், என்னை மிரட்டி வருகின்றனர். எனவே, மேற்கண்ட எனது நிலத்தை அபகரிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களிடம் இருந்து எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு கொடுக்கும்போது ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவையின் தலைவர் பவுத்தன் மற்றும் ஆறுமுகத்தின் குடும்பத்தினரும் உடனிருந்தனர்.

Related Stories: