பூட்டிய வீட்டுக்குள் முதியவர் சடலம்

தென்தாமரைகுளம்.நவ.14:  பொற்றையடி அருகே உள்ள இலங்காமணிபுரத்தை சேர்ந்தவர்  சுந்தரமாணிக்கம்(72). ஊரக வேலை திட்டத்தில் பணிபுரிந்து வந்தார்.  இவருக்கு பேவி என்ற மனைவியும், 4 மகள்களும், இரண்டு மகன்களும் உண்டு. இதில்  மூத்த மகன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு   இறந்துவிட்டார். சுந்தரமாணிக்கம் மட்டும் இலங்காமணிபுரத்தில் உள்ள தனது  வீட்டில் தனிமையில்  வசித்துவந்தார். பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமாகி  வெளியூர்களில்  வசித்து வருகின்றனர். இவரது மனைவி பேவி  இளைய மகன்  சுரேஷ்குமாருடன் அருமனையில் வசித்து வருகிறார். சுரேஷ்குமார் அருமனை காவல்  நிலையத்தில் உதவிஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சுந்தரமாணிக்கம் 2 நாட்களாக வேலைக்கு செல்லவில்லை. இதையடுத்து அவருடன்   வேலைக்கு செல்லும் பெண் சுசீலா அவருடைய வீட்டுக்கு நேற்று வந்துள்ளார் .அப்போது வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியதால்  அருகிலுள்ள சிலரை கூட்டிக்கொண்டு  கதவை உடைத்து பார்த்த போது  சுந்தரமாணிக்கம் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த தென்தாமரைகுளம் போலீசார்  உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர்.  சுந்தரமாணிக்கம் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று  கூறப்படுகிறது.   

Related Stories: