தூத்துக்குடியில் செல்போன் கடையில் தீ விபத்து ரூ.1.50 லட்சம் பொருட்கள் சேதம்

தூத்துக்குடி,நவ.14: தூத்துக்குடியில் செல்போன் சர்வீஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் செல்போன்கள், லேப்டாப் உள்ளிட்ட ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.தூத்துக்குடி வள்ளிநாயகபுரத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவர் பிரையண்ட் நகர் 12வது தெவில் மொபைல், லேப்டாப் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிச் சென்றார். நேற்று காலையில்  அவரது கடையில் இருந்து புகை வந்துள்ளது. தகவலறிந்த பத்மநாபன் கடைக்கு சென்று  திறந்து பார்த்தபோது செல்போன்கள், லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதுகுறித்து டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் பழுது பார்க்க வைத்திருந்த செல்போன்கள், லேப்டாப்கள், டிவிகள் உள்ளிட்ட ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: