திருவள்ளூர், நவ. 14: உள்ளாட்சி தேர்தலுக்கு, வாக்குப்பதிவு அலுவலரை நியமிப்பதற்கான பெயர் பட்டியல் தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில், நகர்ப்புறம், ஊரக பகுதி என உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் டிசம்பரில் தேர்தல் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. அதற்காக, மாவட்டத்தில் வாக்குப்பதிவு அலுவலர் பெயர் பட்டியல் தயார் செய்யும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில், 3,259 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில், ஆவடி மாநகராட்சி, 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற பகுதிகளில் 6,84,000 வாக்காளர்கள் உள்ளனர். இப்பகுதியில் 682 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.ஊரக உள்ளாட்சி அமைப்பான, 14 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 526 ஊராட்சிகளில் 13,54,000 வாக்காளர்கள் உள்ளனர். இப்பகுதிகளில் 2,577 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 6,403 வாக்கு அளிக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.