சேந்தமங்கலம், நவ.13: சேந்தமங்கலம் அருகே கொல்லிமலை அடிவாரத்தில் நீர்வீழ்ச்சியை மேம்படுத்தி சுற்றுலா தளமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பேளுக்குறிச்சியில் பிரசித்தி பெற்ற பழனியப்பர் கோயில் உள்ளது. கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள இக்கோயிலுக்கு சேலம், நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த திருப்பணி நடந்து வருகிறது. இந்நிலையில், மாவட்டம் முழுவதும் பெய்து வரும் தொடர் மழையால் கோயிலின் எதிரில் உள்ள வனத்தில் நீர்வீழ்ச்சி உருவாகியுள்ளது. கொல்லிமலை ஐந்து நாடு பகுதிகளிலிருந்து வரும் தண்ணீர் வனப்பகுதிகளில் வந்து இங்கு 5 அடி உயரத்தில் அருவியாக கொட்டி, இங்கிருந்து மேலப்பட்டி ஏரிக்கு செல்கிறது. தற்போது இந்த நீர்வீழ்ச்சியில் உள்ளூர் மக்கள் மட்டும் குளித்து வருகின்றனர்.