காரிமங்கலத்தில் துணிகரம்: 2 வீடுகளின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை கொள்ளை

தர்மபுரி, நவ.13: காரிமங்கலத்தில் 2 வீடுகளின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் 12 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தட்டரஅள்ளி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (32). விவசாயி. இவர் கடந்த 10ம் தேதி வெளியூரில் உள்ள உறவினர் திருமணத்திற்கு சென்று விட்டு, நேற்று முன்தினம் மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் நகைகள் திருடு போனது தெரியவந்தது.

இதேபோல், காரிமங்கலத்தை சேர்ந்த குப்புசாமி (60) என்பவர், நேற்று முன்தினம் குடும்பத்தோடு, குலதெய்வ கோயிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 8 பவுன் நகைகள் திருடு போயிருந்தது.  இதுகுறித்த செந்தில்குமார், குப்புசாமி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில், காரிமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: