காரிமங்கலம், நவ.13: காரிமங்கலம் ஒன்றியத்தில், பதற்றமான வாக்குசாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில், உள்ளாட்சி தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்தும், அங்கு செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பிடிஓ வடிவேலன் தலைமை வகித்தார். தாசில்தார் கலைச்செல்வி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின் போது, பதட்டமான வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்தும், அங்கு காவல்துறையினரின் எண்ணிக்கை மற்றும் செயல்பாடு ஒருங்கிணைப்பு குறித்தும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது, மாற்றுத்திறனாளிகளுக்கு வேண்டிய வசதிகள் வழங்குவது உள்ளிட்டவை குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டது.