அணை தொட்டியில் தவறி விழுந்த கடமான்

பழநி, நவ.13: பழநி அருகே பாலாறு அணை நீர் தொட்டியில் தவறி விழுந்த மானை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர். பழநி வனச்சரகம் 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இங்கு யானை, சிறுத்தை, மான், கேளையாடு உள்ளிட்ட விலங்குகள் அதிகளவு உள்ளன. இவை அடிக்கடி உணவு , குடிநீர் தேடி வனப்பகுதி எல்லைகளில் உள்ள அணைகளுக்கு வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று பழநி அருகே பாலாறு- பொருந்தலாறு அணையில் தண்ணீர் அருந்துவதற்காக வந்த கடமான் ஒன்று அணையின் நீர் தொட்டியில் தவறி விழுந்து,  மேலே ஏற முடியாமல் நீந்தி தவித்தது.  அப்போது அணைப்பகுதிக்கு மீன் பிடிக்க வந்த மீனவர்கள், பொதுமக்கள் இதனை  கண்டனர். உடனடியாக நீச்சல் தெரிந்த சிலர் தண்ணீருக்குள் குதித்து தத்தளித்த கடமானை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவலறிந்து தீயணைப்புப்படையினர், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் பொதுமக்களே மானை மீட்டு விட்டனர். ஆமீட்கப்பட்ட மான் நீண்ட நேரம் நீந்திக் கொண்டே இருந்ததால் சோர்ந்து போயிருந்தது. பின்னர் வனத்துறையினரும், தீயணைப்புப்படையினரும் பக்குவமாக மானை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர்.

Related Stories: