நிலக்கோட்டை அருகே கால்வாயில் இறந்து கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது

திண்டுக்கல், நவ. 13: நிலக்கோட்டை அருகே பெரியாறு கால்வாயில் இறந்து கிடந்தவரின் அடையாளம் தெரிந்து, அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நிலக்கோட்டை தாலுகா, மட்டப்பாறை ஊராட்சி கரட்டூர் பகுதியில் செல்லும் வைகை பெரியார் பிரதான கால்வாயில் 12வது கண் பாலத்தில் கடந்த நவ.10ம் தேதி சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஒரு அடையாளம் தெரியாத பெண்ணின் பிணம் மிதந்து கொண்டிருந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் மட்டப்பாறை கிராம நிர்வாக அலுவலர் செந்தில்கண்ணனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் கொடுத்த புகாரின் பேரில் விளாம்பட்டி இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சப் இன்ஸ்பெக்டர் தயாநிதி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பெண்ணின் படத்தை வாட்ஸ்அப்பில் வெளியிட்டு விசாரணை நடத்தினர். இதை பார்த்த உறவினர்கள் வந்து இறந்த பெண்ணின் அடையாளம் காட்டினர். இதில் அவர் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நகரை சேர்ந்த பெரியகருப்பன் மனைவி லட்சுமி (70) என்பது தெரிந்தது. மேலும் அப்பெண் ஆற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி அடித்து வரப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவரது மகள் வசந்தியிடம், லட்சுமியின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: