பாபநாசம், நவ. 13: கபிஸ்தலம் அருகே உள்ள சேதமடைந்து காணப்படும் அம்மன் நகர் பகுதி சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம் வளர்ந்து வரும் ஊராகும். இந்த ஊரில் கபிஸ்தலம் சாலையில் உள்ள அம்மன் நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு சாலைகள் அமைக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாவதால் குண்டும், குழியுமாக வாகன போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது.மழை நாட்களில் குண்டும், குழியுமான இந்த சாலையில் மழைநீர் தேங்கி தொற்று வியாதிகள் பரவும் நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து அம்மன் நகரிலுள்ள சாலைகளை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.