சூளகிரி, நவ.13: சூளகிரி-ராயக்கோட்டை சாலையில் விபத்துக்களை தடுக்க , வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சூளகிரி -ராயக்கோட்டை தேசிய சாலை வழியாக பெங்களுரு, கோவா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு லாரிகள், கன்டெய்னர், கனரக வாகனங்கள் மற்றும் பஸ்கள் உள்ளிட்ட, பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் பெங்களுருக்கு செல்லும் சரக்கு வாகனங்கள், லாரிகள் அதிவேகத்தில் சென்று வருகிறது. பிரிவு சாலை வழியாக வரும் வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலையை கடக்க வேண்டியுள்ளது. ஆனால் அசுர வேகத்தில் வரும் வாகனங்களால், அவர்களால் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முடியாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் சூளகிரி அருகே மேடுபள்ளம் என்ற இடத்தில் தான் அதிகளவில் வாகன விபத்துக்கள் ஏற்படுகிறது.