சேதமடைந்த தொட்டிகளால் வீணாகும் காவிரி குடிநீர்

சாயல்குடி, நவ. 13: கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாய் ஏர்வால்வு தொட்டிகள் சேதமடைந்து கிடப்பதால் இரவு நேரங்களில் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் கிராமங்களுக்கு தண்ணீர் போய் சேருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரூ.616 கோடி மதிப்பீட்டில் காவிரி, ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. திருச்சி கொள்ளிடம் ஆற்றில் ராட்சத கிணறுகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மற்றும் சிவகங்கை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. திருச்சியிலிருந்து சிவகங்கை, பரமக்குடி, முதுகுளத்தூர் வழியாக கடலாடி, சாயல்குடி பகுதிகளுக்கும், சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் கடுகுசந்தை, கீழச்செல்வனூர், சிக்கல் பகுதிக்கு ராட்சத சிமென்ட் பூசப்பட்ட இரும்பு குழாய் மூலம் தண்ணீர் செல்கிறது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக சாலையோரம் தோண்டப்படும் குழிகள், தண்ணீர் திருட்டுக்காக சேதப்படுத்துதல் போன்ற காரணங்களால் பல இடங்களில் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் ஆங்காங்கே கசிந்து வீணாகி வருகிறது.

மேலும் குழாய் ஏர்வால்வு தொட்டிகள் அனைத்தும் மூடாமல் திறந்து கிடக்கிறது. இதில் பொதுமக்கள் தண்ணீர் எடுத்து வந்தாலும் கூட, சிலர் தொட்டிக்குள் சோப்பு போட்டு குளித்தல், துணிளை துவைத்தல், டிராக்டர், டேங்கர்களில் தண்ணீர் எடுத்தல் போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பெரும்பான்மையான தொட்டிகள் சேதமடைந்து கிடக்கிறது. இதனால் தொட்டிகளிலிருந்து வழிந்தோடி இரவு நேரங்களில் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருவதால், கிராமங்களுக்கு தண்ணீர் போய் சேராததால், குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை என பொதுமக்கள புகார் கூறுகின்றனர். எனவே சேதப்படுத்தப்பட்டுள்ள குழாய், ஏர்வால்வு தொட்டிகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: