சாயல்குடி, நவ. 13: திருஉத்திரகோசமங்கை மற்றும் சாயல்குடி பகுதி சிவன் கோயில்களில் சிறப்பு அன்னாபிஷேகம் நேற்று நடந்தது. ஐப்பசி மாத பவுர்ணமியில் சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் நடத்துவது வழக்கம், நேற்று சிறப்பு அன்னாபிஷேகத்தை முன்னிட்டு திருஉத்திரகோசமங்கை மங்களேஸ்வரி சமேத மங்களநாதருக்கு விபூதி, சந்தனம், திருமஞ்சனபொடி, திரவியபொடி, பால்,பன்னீர், இளநீர் உள்ளிட்ட 11 வகைபொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் 100 கிலோ எடையுள்ள சாதம், பச்சை காய்கனிகள் படைத்தும், சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதுபோன்று சாயல்குடி அருகே மாரியூர் பவளநிற வள்ளியம்மன் சமேத பூவேந்தியநாதர், மேலக்கிடாரம் சிவகாமி அம்பாள் சமேத திருவனந்தீஸ்வரமுடையார், சாயல்குடி மீனாட்சியம்மன் சமேத கைலாசநாதர், டி.எம்.கோட்டை கருணாகடாச்சி சமேத செஞ்சிடைநாதர், மங்களம் ரேணுகாம்பாள் சமேத ஆதிசிவன், ராமநாதபுரம் சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள், விஷேச பூஜைகள் நடந்தது.