கோவை,நவ.13: கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த லட்சுமணன் என்பவர் கடந்த ஆண்டு பணிக்கு செல்லும்போது மேட்டுப்பாளையம் சாலையில் தனியார் வாகனம் மோதி உயிரிழந்தார். அதேபோல் மற்றொரு தனியார் நிறுவன ஊழியர் வேலுச்சாமி என்பவர் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் காளப்பட்டி சாலையில் செல்லும்போது தனியார் வாகனம் மோதி உயிரிழந்தார். கோவை இ.எஸ்.ஐ. கார்ப்பரேஷன் பொறுப்பு கூடுதல் ஆணையர் ரகுராமன் ஒப்புதலின் பேரில் லட்சுமணனின் மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கு ரூ.2,63,839 நிலுவைத்தொகையும், மாத பென்சனாக ரூ.16,523 வழங்குவதற்கான ஒப்புதல் கடிதமும் வழங்கப்பட்டது. அதேபோல வேலுசாமியின் மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கு ரூ.1,81,737 நிலுவைத்தொகையும், மாத பென்சன் ரூ.11,501 வழங்குவதற்கான ஒப்புதல் கடிதமும் வழங்கப்பட்டது. ஒப்புதல் கடிதங்களை காட்டூர் இ.எஸ்.ஐ. கிளை அலுவலக மேலாளர் பிரேமானந்தன் வழங்கினார். அலுவலக பணியாளர்கள் நடராஜன், ராமச்சந்திரன், ரத்தினகுமார், சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.