குன்னூர், நவ.13: குன்னூர் நகரில் மட்டும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய அணையான ரேலியா அணை இருந்து வருகிறது. 43.5 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையில் இருந்து தண்ணீர் குன்னூர் நகரின் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. வறட்சி காலங்களில் தண்ணீர் அளவு 12 அடிக்கும் குறைவாகவே இருந்தது. இதனால், மக்கள் தண்ணீரை தேடி பல கி.மீ., தொலைவில் உள்ள நீரோடைகளில் இருந்து வாகனங்கள் மூலமாகவும், தள்ளுவண்டி மூலமாகவும் கொண்டு வந்து பயன்படுத்தி வந்தனர். நகராட்சி சார்பில் 15 நாட்கள் முதல் 20 நாட்கள் வரை சுழற்சி அடிப்படையில், நகருக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. அதன் பின்னர் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் , மக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்கி வந்தனர். தற்போது, மழை பெய்து வந்ததால் ரேலியா அணை நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது. இருப்பினும் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நகராட்சியில் முறையான கட்டமைப்பு இல்லை. தண்ணீர் இருந்தும் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வினியோகித்து வருகின்றனர். இதனால் குன்னூர் பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.