திருநின்றவூர்: திருநின்றவூர் பேரூராட்சிக்குட்பட்ட தெருக்களில் குவிந்து கிடக்கும் குப்பைகளால், சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் வீடுகளில் துப்புரவு தொழிலாளர்கள் வேலை செய்வதால்தான் குப்ப குவியல்களை அகற்றவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருநின்றவூர் பேரூராட்சியில் கோமதிபுரம், பெரியகாலனி, ராமதாசபுரம், கன்னிகாபுரம், சுதேசி நகர், முத்தமிழ் நகர், திருவேங்கடநகர், லட்சுமிபுரம், கிருஷ்ணாபுரம், வச்சலாபுரம், முருகேசன் நகர், லலிதாஞ்சலி நகர், பிரகாஷ் நகர் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் உள்ளன. இங்குள்ள 18 வார்டுகளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். சென்னை ஒட்டியுள்ள பேரூராட்சிகளில் திருநின்றவூர் பேரூராட்சியும் ஒன்றாகும். இப்பகுதியில் உள்ள குப்பைகளை பேரூராட்சி ஊழியர்கள் சரிவர அகற்றுவதில்லை.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், திருநின்றவூர் பேரூராட்சியில் சமீபகாலமாக முக்கிய பிரதான சாலை, தெருக்களில் குப்பைகளை சரி வர அகற்றுவதில்லை. எனவே பல தெருக்களில் உள்ள தொட்டிகளில் குப்பைகள் நிறைந்து வழிகின்றன. குப்பைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் கவர்கள், துணிமணிகள் காற்றில் பறந்து பைக், சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகளின் முகத்தில் விழுவதால் விபத்தில் சிக்குகின்றனர். சில இடங்களில் கழிவுநீரில் குப்பைகள் தேங்கிக்கிடக்கின்றன.