திருவொற்றியூர்: குடும்ப தகராறில் பூரிக்கட்டையால் மனைவியை அடித்து கொன்றுவிட்டு, உடல்நிலை பாதிப்பால் இறந்ததாக நாடகமாடிய கணவன் கைது செய்யப்பட்டார்.திருவொற்றியூர் ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் ஏழுமலை (40). இவருக்கும், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கோவிலூர் கிராமத்தை சேர்ந்த வனிதா (32) என்பவருக்கும், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு, யோகேஷ்வரன், மாதேஸ்வரன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.கருத்து வேறுபாடு காரணமாக, தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதுபோன்ற நேரங்களில் ஏழுமலை தனது மனைவியை அடிப்பார், என்று கூறப்படுகிறது. இதுபற்றி வனிதா தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள், ஏழுமலையிடம் பேசி சமாதானம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், கடந்த 3ம் தேதி வனிதாவின் பெற்றோரை செல்போனில் தொடர்புகொண்ட ஏழுமலை, ‘‘உடல் நலக்குறைவால் வனிதா இறந்து விட்டாள்,’’ என கூறி அழுதுள்ளார். பின்னர், தனியார் ஆம்புலன்ஸ் மூலம் வனிதாவின் உடலை எடுத்துக் கொண்டு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கோவிலூர் கிராமத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது, வனிதாவின் இறப்பில் மர்மம் இருப்பதாக, அவரது தந்தை குப்புசாமி திருவண்ணாமலை போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், திருவண்ணாமலை போலீசார் இதுபற்றி திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.