அலங்காநல்லூர், நவ.12: மதுரை, மேலூர், கன்னிவாடி, அருப்புகோட்டை, திருமங்கலம், உசிலம்பட்டி கோட்டங்களில் உள்ள கரும்பு விவசாயிகளின் ஜீவாதாராமாய் விளங்கியது. அலங்காநல்லூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை. இந்த ஆண்டு கரும்பு அரவையை தொடங்க முடியாமல் நிதி நெருக்கடி மற்றும் கரும்பு பதிவு குறைவு காரணமாக ஆலைமூடும் அபாயத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. ஆலையில் பணியாற்றும் அடிப்படை தொழிலாளர்கள், மேலாண்மை இயக்குநர், கரும்பு அலுவலர்கள், உதவி அலுவலர்கள்,களப்பணியாளர்கள் உள்ளிட்ட 350 க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு 10 மாதமாக சம்பளம் வழங்கவில்லை. இதேபோல் கடந்த 3 ஆண்டுகளாக ஆலை அரவைக்காக கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கும் நிலுவைத்தொகை முழுமையாக வழங்கபடவில்லை. இது போன்ற பல்வேறு பிரச்னை காரணமாக இந்த ஆண்டு அரவை தொடங்குமா என்ற சந்தேகம் கரும்பு விவசாயிகளிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில் கரும்பு பதிவு குறைவு, சம்பள பாக்கி காரணமாக கரும்பு பெருக்கு உதவி அலுவலர்கள் 10 பேர் விருப்ப ஒய்வு வழங்க வேண்டி ஆலை மேலாண்மை இயக்குநர் சிவகாமியிடம் மனு கொடுத்து ஆலை நிர்வாகத்திற்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளனர். இதுகுறித்து ஆலைநிர்வாக தரப்பில் சிலரிடம் கேட்ட போது, கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையில்லாத காரணத்தால் கரும்பு விவசாயத்தை முழுமையாக விவசாயிகள் கைவிட்டு விட்டனர். மேலும் கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு அரசு உரிய நேரத்தில் அரவை பணம் வழங்குவதில்லை. இதேபோல் இந்த ஆலையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கடந்த 10 மாதமாக சம்பளம் வழங்கவில்லை.