காரியாபட்டி, அக்.18: காரியாபட்டி நகர் பகுதியில் பேரூராட்சி சார்பில் கழிவறைகள் அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, மல்லாங்கிணறு ஆகிய பேரூராட்சிகள் வளர்ந்து வரும் பகுதிகளாகும். காரியாபட்டி, மல்லாங்கிணற்றை சுற்றி 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மக்கள் அத்தியாவசிய பொருள்கள் வாங்க, விற்க காரியாபட்டிக்கு வருகின்றனர். ஒரு நாளைக்கு 2 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். அப்படி வரும் மக்களில் ஆண்களுக்கு அவசரம் ஏற்பட்டால் ஏதேனும் மறைவில் சென்று சிறுநீர் கழித்து விடுகின்றனர். பெண்கள் அவசரத்திற்கு பஜாரில் இருந்து பஸ் ஸ்டாண்டிற்கு சுமார் அரை கிலோமீட்டர் தூரம் வரவேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் அவர்களுக்கு பல சிரமங்கள் ஏற்படுகிறது. வியாபார நோக்கத்தோடு மெயின் ரோட்டில் பேரூராட்சி மற்றும் தனியார் கடைகள் கட்டி வாடகைக்கு விடுகின்றனர். இந்த கடைகளை கட்டும் தனியார் அருகில் முறையாக கழிப்பறைகள் அமைப்பதில்லை. இதனால் கடைகள் வைத்திருப்பவர்கள் சிறுநீர் கழிக்க இரு சக்கர வாகனங்களில் சென்று ஐயப்பன் கோவில், தோப்பூர் ரோடு, காரியாபட்டி யூனியன் ஆபீஸ் பின்புறம் என அலைய வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே காரியாபட்டி நகர் பகுதியில் போதிய கழிவறை கட்ட வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.