விருதுநகர், அக்.18: தலைமையாசிரியர் இழிவாக பேசுவதாக பள்ளி மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அயன்கரிசல் குளம் உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், பெற்றோர்கள் நேற்று புகார் மனு அளித்தனர். அவர்கள் கூறுகையில், அயன்கரிசல் குளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்பு வரை உள்ளது. அயன்கரிசல்குளம், வளையங்குளம், வெள்ளைபொட்டல், அரசகுளம், அழகாபுரி ஆகிய ஊர்களில் இருந்து 500க்கும் அதிகமான மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இவர்களில் 80க்கும் மேற்பட்ட அருந்ததியர் இன மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். உயர்நிலை பள்ளியில் தலைமையாசிரியர் பணியிடம் நிரப்பப்படாத நிலையில், உதவி தலைமையாசிரியராக உள்ள ஞானகுரு தலைமையாசிரியர் பொறுப்பில் உள்ளார். அருந்ததியர் மாணவ, மாணவியரை சாதியை சொல்லி திட்டுகிறார். மாட்டுக்கறி தின்பதால் தான் இப்படி இருக்கிறீர்கள் என திட்டுகிறார். இது தொடர்பாக பெற்றோர் சென்று கேட்டால், அப்படித்தான் கூறுவேன் என்கிறார். இழிவாக பேசும் தலைமையாசியர் பொறுப்பில் உள்ள ஞானகுரு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.