தேனி, அக். 18: தேனி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை நிர்வாக குளறுபடியால் ஊராட்சி மன்றங்களில் பணிபுரியும் பணியாளர்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு-மயிலாடும்பாறை, போடி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த எட்டு ஊராட்சி ஒன்றியங்களிலும் சேர்த்து 130 ஊராட்சி மன்றங்கள் உள்ளன.ஊராட்சி மன்றங்களில் பணிபுரியும் செயலர்கள், எழுத்தர்கள், துப்புரவுப்பணியாளர்கள், தண்ணீர் மேல்நிலைத்தொட்டி திறப்பாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு ஊராட்சிக்கான பொதுநிதியில் இருந்து சம்பளம் வழங்கப்படுவது வழக்கம். இதுதவிர ஊராட்சிகளில் சாலைபராமரிப்பு, தெருக்குழாய் பராமரிப்பு, தெருமின்விளக்கு பராமரிப்பு, சுடுகாடு பராமரிப்பு, பொதுச்சுகாதார பராமரிப்பு போன்ற பணிக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளில் ஈடுபடுவோருக்கு ஊராட்சி நிர்வாகம் ஊராட்சி பொதுநிதியில் இருந்து காசோலையாக பணத்தை வழங்குவது வழக்கம்.இந்த நிலையில் தமிழக அரசு இத்தகைய செலவினங்களை செலவளிக்க காசோலையை பயன்படுத்தக்கூடாது. பொதுநிதி பராமரிப்பு முறை எனக்கூடிய பிஎப்எம்எஸ் என்ற முறையில் அனைத்து பணியாளர்கள் மற்றும் பராமரிப்பு செலவினங்களுக்கு உரியவரின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணத்தை செலுத்த வேண்டும் என கடந்த மாதம் உத்தரவிட்டது. இத்திட்ட செயல்முறை குறித்து உரிய திட்டமிடலோ,விழிப்புணர்வோ ஊராட்சி நிர்வாகத்தில் இல்லாததால், தமிழகம் முழுவதும் இம்முறை கைவிடப்பட்டு பழைய முறையே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தேனி மாவட்டத்தில் மட்டும் ஊராட்சி பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் தீபாவளி அட்வான்ஸ் தொகை மட்டும் ஊராட்சி பொதுநிதியில் இருந்து வழங்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்றபடி, தெருவிளக்கு, பொதுகுடிநீர் குழாய், பொதுச்சுகாதார பராமரிப்பு போன்ற பணிகள் மேற்கொள்ள அனுமதிக்காத நிலை உள்ளது.