பரமக்குடி, அக்.18: பரமக்குடி நகர் பகுதிகளில் முறையான வாறுகால் மற்றும் சாலைகள் அமைக்காததால், மழையால் சேறும் சகதியுமாக சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கிறது. இதனால் பொதுமக்கள், வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை உள்ளது. பரமக்குடி நகராட்சி ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக வார்டுகளை கொண்ட வளர்ந்து வரும் நகரமாக உள்ளது. மத்திய,மாநில அரசுகளின் மூலம் வழங்கப்படும் மேம்பாட்டு நிதி, திட்டங்களுக்கான நிதிகள், எம்.எல்.ஏ., எம்.பி.,நிதி பெறப்பட்டு பயன்படுத்தி வருகின்றது. இந்த நிதிகள் சுகாதார மற்றும் நகர் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிதிகளை முறையாக பயன்படுத்தாமல், சாலை,வரத்து கால்வாய், குடிநீர் இணைப்பு, சுகாதார பணிகள் என அலுவலக பணிகளை தவிர மற்ற அனைத்து பணிகளையும் நகராட்சி நிர்வாகம் ஆளும் கட்சினருக்கு ஒப்பந்தம் கொடுப்பதால், பெயரளவில் பணிகளை முடித்து பல கோடிகளை அரசுக்கு இழப்பு ஏற்பட்டுத்தியுள்ளனர். வாறுகால் அமைப்பது முதல் சாலை அமைப்பது வரை அனைத்து பணிகளிலும் சில நகராட்சி அலுவலர்கள் பணம் பெற்றுக்கொண்டு கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதால் வாறுகால் சேதமடைந்து சாலைகளில் கழிவுநீர் தேங்கியுள்ளது. ஒரு மாதத்திற்கு முன் அமைக்கப்பட்ட சாலைகள் மண் தரையாக காட்சியளிக்கிறது. காட்டுபரமக்குடி பூவைசிய இந்திரகுல தெரு, முல்லைநகர், புது நகர், கிருஷ்ணா தியேட்டர் பகுதிகள், இமானுவேல் சேகரன் நினைவி சாலை, முனியாண்டிபுரம் காந்தி நகர், பாலன் நகர், பொன்னையாபுரம் உள்ளிட்ட 36 வார்டுகளிலும் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவுநீர் தேங்கியுள்ளது.