தொண்டி, அக்.18: தொண்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் டாஸ்மாக் கடைகளால் பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுவதால், அதை மூடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற போது தமிழகத்தில் படிப்படியாக மதுபான கடைகள் முடப்படும் என அறிவிப்பு செய்தனர். அதனடிப்படையில் 500 கடைகள் மட்டுமே மூடப்பட்டது. அதன் பிறகு தற்போது உள்ள அரசு எந்த கடையையும் மூடியதாக தெரியவில்லை. நாளுக்கு நாள் மதுபானம் அருந்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசுக்கு கூடுதல் வருமானம் வரும் ஒரு வழி என்பதால் அரசும் இதில் கவனம் செலுத்துவதில்லை. கூலி தொழிலாளிகள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை டாஸ்மாக் கடையிலேயே கொடுத்து விட்டு செல்வதை பார்க்க முடிகிறது. இதனால் குடும்பங்கள் மிகவும் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டு மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் நடக்கும் பெரும்பாலான விபத்துகள் மதுபானம் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் நலன் கருதி டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.