ராமேஸ்வரம், அக். 18: கடலுக்கு செல்ல தடை விதித்துள்ள நிலையில், பாம்பன் விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். இதனால் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக நாட்டுப்படகு மீனவர்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்.பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த காற்று வீசுவதோடு, மழையும் பெய்வதால், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள், 2 நாட்கள் கடலுக்கு செல்ல தடை விதித்து நேற்று முன்தினம் மாலை மீன்வளத்துறை உத்தரவிட்டது. ஆனால் அன்று காலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று விட்டதால், மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடிக்க செல்லும் பாம்பன், மண்டபம் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லாமல் படகுகள் கரை நிறுத்தப்படும் என கூறப்பட்டது.கடலுக்கு சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று காலை கரை திரும்பிய நிலையில், பாம்பன் விசைப்படகு மீனவர்கள் 90க்கும் மேற்பட்ட படகில் நேற்று மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. வழக்கம்போல கடலுக்கு செல்ல பாம்பன் மீன்வளத்துறை அதிகாரிகள், அனுமதி டோக்கன் வழங்கியதால் கடலுக்கு சென்றதாக விசைப்படகில் சென்றவர்கள் தெரிவித்தனர்.