பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தில் ஆதாரை பதிவு செய்ய வேண்டும் திருவிடைமருதூர் பகுதி விவசாயிகளுக்கு அழைப்பு

கும்பகோணம், அக். 18: பிரதமரின் கவுரவ நிதி திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் திருவிடைமருதுார் வட்டாரத்தில் தகுதியுள்ள விவசாயிகள் சேர்க்கப்பட்டு பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தில் ஏற்கனவே தகுதியுள்ள விவசாயிகள் 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ 2 ஆயிரம் வீதம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் சேர தகுதியுள்ள விவசாயிகள் சேர்க்கப்படாமல் விடுபட்டிருந்தால் அவர்கள் தங்களது ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் சிட்டா ஆவணங்களுடன் அருகிலுள்ள பொது சேவை மையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் WWW.PMKISAN.GOV.IN என்ற இணையதளம் மூலமும் பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் ஏற்கனவே இணைந்த விவசாயிகள் முதல் இரண்டு தவணை நிதி பெற்றவர்கள் சிலருக்கு மூன்றாவது தவணை வரவு வைக்காமல் இருந்தால் தங்களது பெயரை ஆதார் அட்டையில் உள்ளவாறு இணையதளத்தில் திருத்தம் செய்து கொள்ள வேண்டும். ஆதார் பெயர் திருத்தத்தை பொது சேவை மையம் அல்லது வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் திருத்தம் செய்யலாம். ஆதார் அட்டை பெயர் மற்றும் வங்கி கணக்கு எண் விபரங்கள் சரியாக பொருந்தியிருந்தால் மட்டுமே மூன்றாவது தவணை, வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். மேலும் விபரங்களை தெரிந்து கொள்ள வட்டார வேளாண்மை விரிவாக மையத்தை அணுகலாம். இவ்வாறு வேளாண்மை உதவி இயக்குனர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Stories: