கும்பகோணம், அக்.18: கும்பகோணம் பகுதியில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த வங்கி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ரூ.53 ஆயிரம் அபராதத்தை அதிகாரிகள் விதித்தனர். கும்பகோணம் பகுதியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதையடுத்து டெங்கு நோய் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை கும்பகோணம் நகராட்சி அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். அதன்படி கும்பகோணம் திருநாராயணபுரம் சாலை, காந்தி நகர் உள்ளிட்ட பகுதியில் நகராட்சியின் நகர்நல அலுவலர் பிரேமா, சுகாதார ஆய்வாளர்கள் டேவிட் பாக்கியராஜ், மணிகண்டன், பாலசுப்ரமணியன் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.