களக்காடு, அக். 18: களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூர், கீழக்கருவேலங்குளம் பகுதிகளில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: மக்களவை தேர்தலைப்போல் இடைத்தேர்தலிலும் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ரூபி மனோகரனை வெற்றி பெறச் செய்ய வேண்டும். தமிழகத்தில் செயல்படாத ஆட்சி நடக்கிறது. பிரதமர் மோடியின் எடுபிடிகள் இபிஎஸ், ஓபிஎஸ். நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வரானேன் என மனசாட்சி இல்லாமல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இவர், சசிகலாவின் காலை பிடித்து முதல்வர் ஆனவர். நீட் தேர்வு வராது என்று ஏமாற்றி மாணவி அனிதாவின் சாவுக்கு காரணமான இவருக்கு டாக்டர் பட்டம் கொடுப்பது நியாயமா.? இந்த இடைத்தேர்தல், ஆட்சி மீது உங்களுக்குள்ள அவநம்பிக்கையை பதிவு செய்ய வேண்டிய தேர்தல் ஆகும். எனவே கை சின்னத்திற்கு வாக்களித்து ரூபி மனோகரனை வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு பேசினார்.