திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெ. மரணத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவர்

களக்காடு, அக். 18:  களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூர், கீழக்கருவேலங்குளம் பகுதிகளில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: மக்களவை தேர்தலைப்போல் இடைத்தேர்தலிலும் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ரூபி மனோகரனை வெற்றி பெறச் செய்ய வேண்டும். தமிழகத்தில் செயல்படாத ஆட்சி நடக்கிறது. பிரதமர் மோடியின் எடுபிடிகள் இபிஎஸ், ஓபிஎஸ். நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வரானேன் என மனசாட்சி இல்லாமல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இவர், சசிகலாவின் காலை பிடித்து முதல்வர் ஆனவர். நீட் தேர்வு வராது என்று ஏமாற்றி மாணவி அனிதாவின் சாவுக்கு காரணமான இவருக்கு டாக்டர் பட்டம் கொடுப்பது நியாயமா.? இந்த இடைத்தேர்தல், ஆட்சி மீது உங்களுக்குள்ள அவநம்பிக்கையை பதிவு செய்ய வேண்டிய தேர்தல் ஆகும். எனவே கை சின்னத்திற்கு வாக்களித்து ரூபி மனோகரனை வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு பேசினார்.

இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, மாவட்ட இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் ஜார்ஜ்கோசல், களக்காடு ஒன்றிய செயலாளர் ராஜன், துணை செயலாளர் கருப்பசாமி பாண்டியன், நகர காங். தலைவர் ஜார்ஜ்வில்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர். திடியூரில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு இதுவரை விடை தெரியாமல் உள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா சாவிற்கு காரணமான உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர். வாக்காளர்களாகிய நீங்கள் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு வாக்களித்து அதிமுக ஆட்சியின் மீதுள்ள அவநம்பிக்கையை பதிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு சொல்ல வராத பிரதமர் மோடி, தற்போது தமிழகத்திற்கு வந்து டிராமா போடுகிறார். இவ்வாறு பேசினார்.

Related Stories: