நெல்லை, அக். 18: அதிமுகவில் சசிகலா இணைவது குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் முடிவு செய்வர் என நெல்லை ரெட்டியார்பட்டியில் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து அமைச்சர் செல்லூர் ராஜூ ரெட்டியார்பட்டியில் நேற்று திண்ணை பிரசாரம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுக அரசு பல்வேறு மக்கள் நல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் 2021 சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் நாங்களே ஆட்சி அமைப்போம்.கிராமங்களில் குடிமராமத்து பணி, ஏழை தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிதி உதவி, கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.18 ஆயிரம் நிதி உதவி, அம்மா பரிசு பெட்டகம், பசுமை வீடுகள், மிக்ஸி, கிரைண்டர் என விலையில்லா பொருட்கள் உள்ளிட்ட சிறப்பான திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது. முதல்வர் எடப்பாடி சமீபத்தில் வெளிநாடுகளுக்கு சென்று அந்நிய முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளார். மக்களின் அரசாக அதிமுக அரசு திகழ்கிறது. தமிழக முதல்வரை எப்போது வேண்டுமானாலும் சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம்.