விராலிமலை, அக்.17: புதுக்கோட்டை மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை மற்றும் தாலுகா பேரிடர் மேலாண்மை முகமையின் சார்பில் சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தினம் விராலிமலை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இலுப்பூர் வருவாய் கோட்ட அலுவலர் டெய்சிகுமார் தலைமையில் மதர்தெரசா கல்விக்குழும தாளாளர் உதயக்குமார் தொடங்கி வைத்தார். தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரின் மாதிரி ஒத்திகையின் போது இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர்( பொறுப்பு) மகேந்திரன் பேசியதாவது: பேரிடர் மேலாண்மை மற்றும் இயற்பை இடர்பாடுகள் குறித்து விழிப்புணர்வு செயலியான டிஎன்-ஸ்மார்ட் ஆப்-ஐ அலைபேசியில் பதிவிறக்கம் செய்து பயன்பெற வேண்டும்.மேலும் சுனாமி, பூகம்பம், நிலநடுக்கம், புயல், காட்டுத் தீ, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் 1077 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும். புயல் காலங்களில் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது. நிலநடுக்கம் ஏற்படும் பொழுது கட்டிடத்தை விட்டு திறந்த வெளிக்கு ஓடி வந்திட வேண்டும் என்றார்.