அறந்தாங்கி, அக்.17: அறந்தாங்கி எம்.ஜி.ஆர் நகரில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்.என்.புரம் பகுதியில் இருந்து எம்.ஜி.ஆர் நகர் வழியாக பெரியகடை வீதிக்கு செல்லும் தார் சாலை உள்ளது. அறந்தாங்கி நகரின் இரண்டு முக்கிய பகுதிகளை இணைக்கும் சாலையாக இந்த சாலை உள்ளது. இந்த சாலை வழியாக வாராப்பூர், எல்.என்.புரம் பகுதிகளில் இருந்து அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவியர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள், பொதுமக்கள் சென்று வருகின்றனர். எம்.ஜி.ஆர் நகர் அருகே காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் ரயில்வே தண்டவாளம் செல்கிறது. இந்த பகுதியில் சாலை சேதமடைந்து, பள்ளமாக மாறியுள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. குறிப்பாக தனியார் பள்ளி வேன்கள் சிரமத்துடன் செல்கின்றன.