புதுக்கோட்டை, அக்.17: புதுக்கோட்டை நகரில் எளிதில் கொசு உற்பத்தியாகும் வகையில் ஏராளமான காலி மது பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் நிறைந்து கிடந்த கட்டிட உரிமையாளருக்கு நகராட்சி நிர்வாகம் ரூ.ஒரு லட்சம் அபராதம் விதித்தது. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கொசு உற்பத்தி காரணிகளை கண்டறிந்து அழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி அறிவுறுத்தி தொடர் கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த சில நாட்களாக தினம் ஒரு தெருக்களில் தூய்மைப்பணி நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, நேற்று காலை நகராட்சி ஆணையர் (பொ) ஜீவா சுப்பிரமணியன், நகர்நல அலுவலர் டாக்டர் யாழினி ஆகியோர் தலைமையிலான குழுவினர் போஸ் நகரில் தூய்மைப்பணியை முடித்துவிட்டு, மார்த்தாண்டபுரம் நுழைந்தனர். அங்குள்ள பழைய பயன்படுத்தப்படாத கட்டிடம் ஒன்றில் ஆய்வு செய்தபோது, அங்கு மாடியிலும், தாழ்வாரப்பகுதியிலும் ஏராளமான காலி மதுப்பாட்டில்கள், காலி தண்ணீர் பாட்டில்கள் ஏராளம் கிடந்தன. ஏறத்தாழ அந்த கட்டிடமே இரவில் மது அருந்தும் இடமாக இருந்திருக்கக்கூடும் என நகராட்சி பணியாளர்கள் தெரிவித்தனர்.