புதுக்கோட்டை,அக்.17: காலை, மாலை நேரங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ஆலங்குடியிலிருந்து புதுக்கோட்டைக்கு தொடர் பேருந்து இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வியாபாரிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகள் என ஏராளமானோர் தினமும் காலை நேரங்களில் புதுக்கோட்டைக்கு செல்கின்றனர். அதேபோல மாலை நேரங்களில் புதுக்கோட்டையிலிருந்து ஆலங்குடிக்கு வருகின்றனர். ஆனால் இவர்கள் சென்று வர போதிய பஸ்வசதி இல்லை. இந்நிலையில், ஆலங்குடியிலிருந்து மழையூர் வழியாக கறம்பக்குடி செல்லும் பேருந்துகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் அதிக அளவில் பஸ்சின் மேற்கூரையில் அமர்ந்தும், படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்கின்றனர். இதனை ஆலங்குடியின் பல்வேறு பகுதிகளில் நிற்கும் போக்குவரத்து போலீசார் கண்டுகொள்வதே இல்லை. மேலும், கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் என பேருந்தில் செல்லும் அனைவரும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.