திருமயம்,அக்.17: திருமயம் அருகே 10 ஆண்டுகளுக்கு மேலாக பழுதடைந்த சாலையை சீரைமைக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல் செய்ய திரண்ட வாலிபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ராயவரத்தில் இருந்து கானப்பூர் வழியாக காரைக்குடி செல்லும் சுமார் 6 கிலோ மீட்டர் சாலை 15 ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்டது. பின்னர் இந்த சாலையை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் சாலை சேதமடைந்து நாளுக்கு நாள் பழுதடைந்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்றது. இதனை சரி செய்ய ஆயிங்குடி, கானப்பூர், செட்டிபட்டி, ஆனைவாரி உள்ளிட்ட கிராம மக்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகின்றனர். இந்நிலையில் மக்கள் போராடும் போது சம்பவ இடத்திற்கு வரும் அதிகாரிகள் போராட்டகாரர்களை சமாதானபடுத்தும் வகையில் ஒரு மாதத்திற்குள் பழுதடைந்த ராயரவம்-காரைக்குடி சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துவிட்டு செல்வதும் அதன் பின்னர் அப்பகுதி மக்கள் ஏமாற்றம் அடைவதுமாக இருந்து வருகிறது. இதனிடையே தற்போது அப்பகுதியில் பெய்து மழை காரணமாக சாலையில் உள்ள பள்ளங்களில் நீர் தேங்கி குளம் போல் மாறி சாலை முழுவதும்சேறும் சகதியுமாக இருப்பதால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் சாலையை கடக்க கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.